Dec 30, 2013

5

குழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்!

  • Dec 30, 2013
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு.

    வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான மனநிலை இல்லை என்பது தான் சரியாய் இருக்கும். ஒவ்வொரு வருடமும் நாட்காட்டியில் வருடங்களின் எண்ணிக்கை கூடிகிறதே தவிற குறிப்பிட்டு சொல்லும் அளவில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாய் தெரியவில்லை என்றாலும் வயசு கூடுவதை போலவே, மன உளைச்சல் பல மடங்கு கூடியிருக்கிறது, பிறக்கும் புத்தாண்டாவது எனக்கும் உங்களுக்கும் இறைவன் வெற்றிப் படிக்கட்டுகளை அமைத்து தர எல்லாம் வல்ல இறைவனை உங்களோடு சேர்ந்து நானும் பிராத்திப்பதோடு, இந்த பதிவின் வழியாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் -2014, தெரிவிப்பதோடு எல்லா வல்ல இறைவன் எல்லா நலமும் வளமும் அருளட்டும்.

    நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற கூட்டான்மையான சமூகத்தில் தனி மனிதனாக யாரும் சாதித்து விட முடியாது, நம்மை சுற்றியிருக்கும் குடும்பத்தார், உறவினர், சமுதாயம், நண்பர், இவர்களாலே தான் எந்த ஒரு மனிதனும் கட்டமைக்கபடுகிறான், இங்கே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க முடிவதில்லை, நமக்கான வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை நம்மை சுற்றியுள்ளவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

    கீழிருக்கும் பச்சை நிற எழுத்துக்கள், நான் சமீபத்தில் நான்கு முறை கண்ட மூடம் கூடம் திரைப்படத்தில் வரும் வசனங்கள் ஆகும், இதை வெறும் சினிமா வசணமாக பார்ப்பதை தவிர்த்து வாழ்வில் நடக்கும் எதார்த்தத்தின் பின்னனியோட பொருத்தி பார்க்க முடிந்தால் நான் சொல்வது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவரும்.

    ”ஒரு காலத்துல எல்லோருக்குமே பொதுவா இருந்த இந்த பூமியில நாம எல்லோரும் அம்மனமா தான் பொறந்தோம், ஆனால் நடுவுல உங்கள மாதிரி ஒரு குடும்பம் நாகரீகம்னு ஒன்னு ஆரம்பிச்சு உங்க தேவைக்கு அதிகமா எடுக்க ஆரம்பிச்சதால, எங்கள மாதிரி ஒரு கூட்டம் எடுக்கிறதுக்கு ஒன்னுமே இல்லாம இன்னைக்கு வரைக்கும் அம்மனமாவே இருந்துகிட்டு இருக்கோம், எங்களோட அடிப்படை வாழ்க்கை திட்டம் தான் உங்க மேல்தட்டு நாகரீக வாழ்க்கை.

    நூறு மாம்பழம் இருக்கிற ஒரு மாமரத்துக்கு கீழ நூறு பேரு பசியோட நின்னாங்கனா அங்க ஆளுக்கு ஒரு பழம் சேரனும்கிறது இயற்கையோட தர்மம், ஆனால் அந்த நூறு பேர்ல உங்கள மாதிரி திறமையும், பலமும் அதிகமா இருக்கிற அஞ்சு பேரு மத்தவங்கள விட சீக்கிரமா ஆளுக்கு அஞ்சு பழங்கள் எடுத்துட்டாங்கனா இருபது பேரு ஒரு பழம் கூட கிடைக்காம பசியில வாடி வேற வழியே இல்லாம அந்த அதிகமா பழம் வச்சுருக்கிவன்கிட்ட பிச்சை கேட்டு நிப்பாங்க, இப்ப அதிகமாக பழம் வச்சுருக்கிவன் இந்த ஒன்னுமே இல்லாதவங்களா வச்சு அஞ்சு மாமரம் நட்டு ஒவ்வொரு மரத்திலிருந்தும் நூறு, நூரு பழங்களை பறிக்க வச்சு அவங்களுக்கு சம்பளம்ங்கிற பேர்ல அவங்க எடுத்துக் கொடுத்த நூறு பழத்திலிருந்து ஒரு பழத்தை எடுத்து கொடுப்பான், இது தான் இங்க நடக்கிறது.

    ஒருத்தன் கிட்ட இருந்து எடுக்கிறது மட்டும் திருட்டு இல்லை, ஒருத்தனை எடுக்க விடாம பண்றதும் திருட்டு தான்.”


    இந்திய பிரதமர் முதல் சாதரண குடிமகன் வரை அனைவருமே அவர்களை சுற்றியுள்ள சமூகத்தால் கட்டமைக்கபட்டவர்கள் தான், இங்கே ஆசைப்படுவதற்கு நமக்கு உரிமை இருக்கிறது ஆனால் அடைவதென்பதற்கோ யாராருடைய உதவிகளோ தேவைப்படுகிறது அதாவது நம்மை சுற்றியுள்ள சமுக மக்களின் உதவி என்பது தேவையாய் இருக்கிறது.டாடாவாக இருந்தாலும் அம்பாணியாய் இருந்தாலும் அவர்களின் உற்பத்தி பொருளை நாம் வாங்கினால் மட்டுமே அவர்கள் கோடீஸ்வரர்கள், நம் தெருவில் அகர்பத்தி தயாரித்து விற்கும் அண்ணன் முன்னேற முடியாமல் அப்படியே இருப்பதற்கும் நாமே தான் காரணம்.

    சமீபத்தில் நடந்த டெல்லி அரசியல் விஷயத்தை கவணித்தால் ஒரு விஷயம் புரியும் ஆண்டுகள் பல ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை காணமால் போகச்செய்தது ஆம் ஆத்மி கட்சிதான் என்றாலும் அந்த வெற்றி அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட திரு.அரவிந்த் கெஜ்ரிவால் என்னவாக வேண்டுமென்பதை, டெல்லி வாழ் மக்கள் தான் தீர்மானித்தார்கள் என்று வேண்டுமானல் சொல்லலாம்.

    மேற்சொன்னது வெறும் உதாரணம் மட்டும் தான் கொஞ்சம் ஆழமாக நிதானமாக யோசித்தால் உலக கோடிஸ்வரர்களையும், தெருவில் பிச்சை எடுப்பவரையும் இரண்டு விதமாக உருவாக்கியது நம் சமூகம் தான் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

    நம் வீட்டில் கூட பெரியவர்கள் அவர்களால் சாதிக்க முடியாமல் போன ஒன்றை அல்லது அவர்கள் விரும்பி கிடைக்காத ஒன்றை குழந்தைகள் மேல் தினிப்பார்கள், தெரிந்தே குழந்தைகளில் சிந்தனை வேகத்தை தடை செய்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி நம் சொந்த விருப்பு, வெறுப்புகளை தினித்து கொண்டிருக்கிறோம் இதுவும் ஒரு வகையான கட்டமைப்புகான தொடக்கம் என்றாலும் ஏதேனும் ஒரு துறையில் வெற்றியாளானய் இருக்க வேண்டியவனை தவறான கருத்து தினிப்புகளால் வெறும் குமாஸ்தா ஆகிய கதைகள் தான் இன்று நிறைய நடந்து கொண்டிருக்கிறது.

    பெரும்பாலனவர்களின் நோக்கம் அவர்களின் குழந்தைகள் நன்கு படித்து உயர்ந்த பதிவியில் அமரவேண்டும் என்பது தான் பெரும் ஆசையாய் இருக்கிறது, அதாவது மேற்சொன்னது போல தவறான கட்டமைப்புகளை கொண்டுதது தான், ஏனையவர்களின் குழந்தைகளிடம் இருக்கும் பண்முக திறமைகளை யாரும் அறிந்து ஊக்குவிப்பதில்லை, இன்றைய நிலையில் குழந்தைகள் கடிவாளம் போடப்பட்ட குதிரைகளாகதான் கல்விச் சாலையில் ஓட வைக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் தான் என்னவோ இலக்குகள் தவறும் போது அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் தளர்ந்து போகின்றனர் இன்னும் சிலர் விபரீதமான முடிகளுக்கும் சென்று விடுகின்றனர்.

    கல்வி அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் கல்வியில் மந்தமாக இருக்கும் குழந்தையிடம் வேறு திறன்கள் நிச்சியம் ஏதாவது இருக்கும், இசையை பற்றி, வணிகத்தை பற்றிய, புதிய ஆராய்ச்சிகளுக்கான யுத்திகள் கூட சாதரண மாணவனிடம் இருந்து வரலாம், அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டியாக இருந்து செயல்பட வேண்டியவர்கள் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், சமூக மக்கள் தான், இன்றைய மக்கள் நினைப்பது போல மருத்துவமும், இன்ஜினியரும், நிர்வாக மேலான்மையும், சாப்ட்வேர் துறையில் மட்டுமே படிக்க வேண்டும் என்றால் வேறு துறைகள் வந்திருக்கவே முடியாது, கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்க முடியாது, இசை இருந்திருக்காது, சினிமா இருந்திருக்காது, பெரிய கண்டுபிடிப்புகளை, மாற்றங்களை நிகழ்த்தியவர்கள் எல்லாம் சாதரண மனிதர்களே அவர்களை சரியான முறையில் கட்டமைத்தது நம் சமூகம் தான்.

    குழந்தைகளுக்கு இலக்குகளை நிர்ணயிப்பதை தவிருங்கள், சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்க பழக்குங்கள், அதாவது நீ படிச்சு விஞ்ஞானி ஆகனும் என்று கட்டாயப்படுத்தும் போது, உங்கள் குழந்தைக்க்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் இல்லையென்றால் நீங்கள் என்ன தான் முயன்றாலும் உங்கள் குழந்தை விஞ்ஞானி ஆகப்போவதில்லை, படிப்பு மற்றும் இன்ன பிற விஷயங்கள் யாவும் வெறும் அறிவு சம்மபந்தபட்டவை மட்டும் அல்ல மனம் சம்பந்தப்பட்டதும் தான். விரும்பி செய்யும் பொழுதுதான் வேகமாக செய்வதுடன் அதில் தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள முடியும்.

    Sande, Mande, Hujde, Thasde, Apil, Mego, Januri, Febre,Junyary, Furby,Mrch,Aprde, Ag, இது உங்களுக்கு புரியுதா? நிச்சியம் புரிய வாய்ப்பில்லை ஆனால் இவையெல்லாம் நாம் தினசரி பயன்படுத்தும் வார்த்தைகள் தான், என்ன கொஞ்சம் எழுத்துபிழைகள் இருக்கிறது, இதை பற்றி தெரிந்துகொள்ள பீகாரின் ஆசிரியை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். விடீயோவை பாருங்கள். மேலும் சில வீடியோக்கள் யூடியுப்பில் இருக்கிறது





    இந்தளவிற்கு இல்லையென்றாலும் தமிழகத்தின் ஆசிரியர்கள் திறனும் பரிசோதனைக்கு உட்படுத்தத்தான் வேண்டியிருக்கிறது. குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள் நிலை இப்படியிருந்தால் படிக்கும் மாணவர்களின் நிலை எப்படியிருக்கும். ஆசிரியர்களுக்கு பண்முக திறமை இல்லாதிருந்தாலும் கூட குறைந்தபட்சம் அவர்கள் சம்பந்தபட்ட துறைகளிலாவது தகுதியானவர்களாய் இருந்தால் நலம்.

    எனது மூத்த மகனுக்கு நான்கு வயதே பூர்த்தியாகி உள்ள நிலையில் KG1 படிக்கிறான், கொஞ்சம் விளையாட்டு ஆர்வம் எதையும் புரிந்துகொள்வதில், பதில் சொல்வதில் சிறப்பாகவே இருக்கிறான் ஆனால் அவனுக்கு எழுதுவதில் ஆர்வம் குறைவு எழுத முயற்சிக்கும் போதெல்லாம் கை வலிக்கிறது என்று அடம்பிடிப்பான், சமீபத்தில் அவனுடைய ஆசியர்கள் வரசொல்லியிருந்தார்கள் என்னவென்று கேட்ட பொழுது ஒன்றும் எழுத மாட்டேன்கிறனாம், விளையாட்டுத்தனம் அதிகம் இருக்கிறதாம், வீட்டில் பெற்றோர்கள் கவணம் எடுத்து சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

    நான்கு வயது குழந்தையிடம் விளையாட்டுத்தனம் இல்லை என்றால் தான் ஆச்சர்யம்? நாங்களே எல்லாம் கற்றுக்கொடுப்பதாய் இருந்தால் பின்னர் உங்களுக்கு ஏன் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு தொகையை அடைத்துக் கொண்டிருக்கிறோம்? 20 மாணவர்கள் இருக்கும் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவனுக்கும் தனியாக நேரம் ஒதுக்க முடியாது என்பது நமக்கு புரிந்த விஷயம் தான், எந்த ஒரு மாணவன் குறிப்பிட்ட விஷயத்தில் பின் தங்கியிருக்கிறானோ அவனுக்கு தனிக்கவணம் எடுத்து பயிற்சி அளிக்க வேண்டும் அது தான் ஆசிரியர்களுக்கு சிறப்பு, 90 % மதிப்பெண் எடுக்கும் மாணவனை 100% மதிப்பெண் எடுக்க வைப்பதல்ல சிறந்த ஆசிரியருக்கான தகுதி, 35% மதிப்பெண் எடுக்கும் மாணவனை 90% மதிப்பெண் எடுக்க வைப்பதே ஒரு சிறந்த ஆசிரியரின் தகுதியும் திறமையும் ஆகும். உண்மையை சொல்லப் போனால் கல்வித்துறை என்பது காசு பார்க்கும் துறையாகி வருடம் பல கடந்து விட்டது.

    கல்யாணத்தை பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என்பதை என்ன அடிப்படையில் முன்னோர்கள் ஏன் சொல்லி வைத்தார்கள் என்று தெரியவில்லை ஆனால் வீட்டை கட்டிப் பார்ப்பது என்பது கடினமாகத்தான் இருக்கிறது, ஆம் ஏதோ ஒரு ஆவேசத்தில் தவறுதலாய் எடுக்கப்பட்ட முடிவில் கடந்த வருடம் மார்ச்-2013ம் வருடம் கணவு இல்லம் கட்ட தொடங்கினேன், கிட்டத்தட்ட ஒன்பது மாதம் நிறைவடைந்த வேளையில் பேஸ்மெண்ட்டிற்கு மேல் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியவில்லை, எல்லாவற்றிலும் பிரச்சினைகள், வங்கி கடனுக்கு முயற்சித்தாலும், பார்க்கலாம் என்பதோடு வங்கி மேலாளர்கள் பேச்சை நிறுத்திக்கொள்கிறார்கள், நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகளும் கை கொடுக்கவில்லை, இன்னும் சில நண்பர்கள் என்ன நினைத்தார்கள் என்றே தெரியவில்லை மின்னஞ்சலுக்கு கூட பதில் அனுப்பவதில்லை, அதனிலும் என் குடும்ப உறவுகளோ, உறவினர்களோ, என் தோல்வியை கொண்டாட தயாராய் இருக்கிறார்கள், யாரோ சொன்னது போல”வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.” என்கிற வகையில் நிறைய தோல்விகளை பெற்று வைத்திருக்கிறேன். சரி நடகட்டும் என்ன செய்ய நான் மேலே சொன்னமாதிரி ஆசைபடுவதற்கு மட்டுமே நமக்கு உரிமை இருக்கிறது என்கிற அங்கலாய்ப்புகளோடு நிறுத்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை, அதே நேரத்தில் முயற்சி திருவினையாக்கும் என்பதில் எல்லாம் சுத்தமாகவே நம்பிக்கையில்லை, அதற்காக முயற்சியை கைவிடுவதாகவும் இல்லை, இறைவன் எந்த நோக்கத்திற்காக நம்மை படைத்தானோ, அந்த இலக்கை சென்றடையும் வரை, நம்மால் முடிந்தவரை வாழ்வின் இறுதி நாள் வரை வாழ்க்கை புதிருக்கு விடை தேடிக்கொண்டும், புதிர்களை விடுவித்து வெற்றி பெற முயற்சித்து கொண்டே இருப்போம். வாழ்க்கை என்பதே போராட்ட களம் தானே அதில் போராட படைக்கப்பட்ட போராளிகள் நாம் இறுதி வரை போராடித்தானே ஆகவேண்டும்.

    என்ன செய்வது உலகம் ஒரு நாடகமேடை அதில் வாழ்க்கை என்பது நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு எபிசோடு, நாம் அனைவருமே நடிகர்கள் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்கள், சிலருக்கு எளிமையான புதிர்களுடனான கதாபாத்திரம், வேறு சிலருக்கு சிக்கலான புதிர்களை கொண்டதான கதாபாத்திரம், இந்த புதிர்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையிலும் பெரிதாய் சுவராஸ்யம் இருக்காது, ஏற்ற இறக்கங்களுடன் கணவுகளோடு கமிட்மெண்ட் நிறைந்தது தான் இந்த வாழ்க்கை.

    என்ன நண்பர்களே மிக நீளமாய் குழப்பமாய் எழுதி விட்டோனோ? உங்களுக்கு பிடித்த கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள்,உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.ஆரோக்கியமான, புத்திசாலித்தனமான சமூகத்தை படைப்பதில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள், நாம் செய்கின்ற செயல்களின் விளைவுகளை நேரடியாக சில நேரம் உணர முடியாவிட்டாலும், நம்முடைய நல்ல செயல்கள் நல்ல சமூகத்தை படைக்கும் என்பது மட்டும் நிதர்சன உண்மையாக இருக்கிறது.

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர